பீகார் பந்த்: பெரும் வன்முறை - ராப்ரி கைது
பாட்னா: என்டிடிவி நிருபர் பிரகாஷ் சிங் மீது ஆளும் ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ ஆனந்த் சிங் மற்றும் அவரது அடியாட்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் சார்பில் இன்று பீகாரில் பந்த் நடத்தப்பட்டது. இதில் பெரும் வன்முறை மூண்டது. முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான ராப்ரி தேவி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
பாட்னாவில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக செய்தி சேகரிக்க ஐக்கிய ஜனதாதள எம்.எல்.ஏ ஆனந்த் சிங்கின் வீட்டுக்கு என்டிடிவி நிருபர் பிரகாஷ் சிங்கும், கேமராமேனும் சென்றனர்.
அப்போது எம்.எல்.ஏவும், அவரது அடியாட்களும் என்டிடிவி குழுவினரை கொலை வெறியுடன் தாக்கினர். ஓட ஓட விரட்டி அடித்தனர். இதில் பிரகாஷ் சிங்கும், கேமராமேனும் படுகாயமடைந்தனர்.
நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காரணமாக பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய ஆனந்த் சிங்கும், அவரது அடியாட்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனந்த் சிங் பெரும் தாதா ஆவார். அவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்பிரச்சினையை லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் அரசியல் பிரச்சினையாக்கி விட்டது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் அட்டகாசம் பாரீர் என்று கண்டித்த அக்கட்சி, இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்தது. இதற்கு பிற எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
அதன்படி இன்று பீகாரில் பந்த் நடத்தப்பட்டது. ஆனால் பந்த் பெரும் வன்முறையாக மாறியது.
தலைநகர் பாட்னாவில், ராஷ்டிரிய ஜனதாதள தொண்டர்கள் கலந்து கொண்ட ஊர்வலத்திற்கு ராப்ரி தேவி தலைமை தாங்கினார். அவரையும் அவருடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் பாட்னாவில் உள்ள மிதிலேஷ் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்னர்.
இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ராஷ்டிரிய ஜனதாதள தலைவர்கள், தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
பந்த் காரணமாக பாட்னாவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் இல்லை.
தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அதேசமயம், அரசுப் பள்ளிகள் இயங்கின. அரசு அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
வன்முறை:
பாட்னா பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை வந்த ராஷ்டிரிய ஜனதாதள தொண்டர்கள், பல்கலைக்கழகம் இயங்குவதைப்பார்த்து ஆத்திரமடைந்து உள்ளே புகுந்து அதை சூறையாடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து சென்று கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.
இதேபோல, பாட்னாவின் பல்வேறு பகுதிகளில் நிதீஷ் குமாரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications