ஓடும் விமானத்தில் இந்திய தொழிலாளர் மரணம்
துபாய்: ஜெட்டாவிலிருந்து ரியாத் வழியாக மும்பைக்குச் சென்ற விமானத்தில் பயணித்த இந்திய தொழிலாளர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர் அப்துல்லா மொஹைதீன் (45) என்பவர், ஜெட்டாவிலிருந்து ரியாத் வழியாக மும்பை செல்லும் செளதி அரேபிய ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார்.
விமானம் பறந்து கொண்டிருந்தபோது அப்துல்லா நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து ரியாத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அப்துல்லா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
யான்பு நகரில் எரிவாயு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் அப்துல்லா. அவரது மரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மரணமடைந்த அப்துல்லாவுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். விடுமுறைக்காக அவர் இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அவரது உடல் ரியாத் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் சவூதியில்தான் இருக்கிறார். அவரிடம் உடல் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்தில் கேரள தொழிலாளர் பலி:
இதற்கிடையே கத்தார் தலைநகர் தோஹாவில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த முகம்மது சபி (40) என்பவர் தீக்காயம் பட்டு மரணமடைந்தார்.
மீன்பிடி படகு ஒன்றில் சபியும், கேரளாவைச் சேர்ந்த மேலும் நான்கு பேரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென படகின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது.
இதில் படகில் இருந்த நான்கு பேரும் கடலில் தூக்கி எறியரப்பட்டனர். சபி பலத்த தீக்காயமடைந்து பலியானார். மற்றவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.
அவருக்கு அமீனா என்ற மனைவியும், பாசிலா, முகம்மது ரஸ்ஸல், உமர் பரூக் என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர்.