மதுரையில் அதிமுக பெண் கவுன்சிலர் படுகொலை
மதுரை: மதுரையில் அதிமுக பெண் கவுன்சிலரை அவரது கள்ளக் காதலரான கொழுந்தன் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றார்.
மதுரை அருகே உள்ள வெள்ளாளபட்டி பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் ருக்மணி (35). இவரது கணவர் பூசாரி. பூசாரியின் சித்தப்பா மகன் வேல் முருகன் (23).
ருக்மணிக்கும், வேல் முருகனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதை அறிந்த பூசாரி, தனது மனைவியை, மதுரை அருகே உள்ள மாமனார் வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு வசித்து வந்தார்.
இந்த நிலையில் பேரூராட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ருக்மணி வெள்ளாளபட்டிக்குச் சென்றார். உடன் பூசாரியும் சென்றார்.
கூட்டத்தை முடித்துக் கொண்டு இருவரும் மதுரை திரும்பினர். பெரியார் பஸ் நிலையம் வந்த அவர்கள் மாமனார் வீட்டுக்குச் செல்ல பஸ்ஸுக்குக் காத்திருந்தனர். அப்போது பூசாரி அறுந்து விட்ட செருப்பைத் தைக்கச் சென்றார்.
அந்த சமயத்தில் அங்கு வேல் முருகன் வந்தார். தன்னுடன் வந்து விடுமாறு ருக்மணியிடம் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த ருக்மணி, வர முடியாது, போய் விடு என்று சப்தம் போட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் தான் கொண்டு வந்திருந்த கத்தியால், ருக்மணியை சரமாரியாக குத்தினார். இதில் வயிறு மற்றும் முதுகில் கத்தி பாய்ந்தது. முதுகில் பாய்ந்த கத்தியை எடுக்க முடியாத அளவுக்கு உள்ளே பாய்ந்து விட்டது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த ருக்மணி, உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
தப்பி ஓட முயன்ற வேல் முருகனை, அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications