பிரதீபா முன் பாஜக- ஜ.தள எம்எல்ஏக்கள் அணிவகுப்பு
பெங்களூர்: கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காமல் இழுத்தடித்து வருவதால் பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் நாளை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து அவர் முன் தங்களது பலத்தை நிரூபிக்கவுள்ளனர்.
கர்நாடகத்தில் ஒப்பந்தப்படி மதச்சார்பற்ற ஜனதாதளம், தங்களிடம் ஆட்சியை ஒப்படைக்காததால், குமாரசாமி அரசுக்கு தந்த ஆதரவை பாஜக விலக்கியது.
இதனால் குமாரசாமி அரசு சிறுபான்மை அரசாக மாறியது. இதையடுத்து குமாரசாமியை பதவி விலகுமாறு ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் அறிவுறுத்தினார். குமாரசாமியும் ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபை முடக்கப்பட்டு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், குதிரை பேரங்கள் தொடங்கின.
ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முன்வராத காரணத்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு ஆதரவு தர பாஜக முன்வராத காரணத்தாலும் யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதாதள மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.பி.பிரகாஷ், தனது ஆதரவாளர்களைத் திரட்டினார். டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்தார். காங்கிரஸ் ஆதரவுடன், மதச்சார்பற்ற ஜனதாதளத்தை உடைக்க அவர் முயன்றார்.
இதைப் பார்த்து அதிர்ந்து போன தேவெ கெளடாவும், குமாரசாமியும் 360 டிகிரி பல்டி அடித்து, பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக தடாலடியாக அறிவித்தனர்.
இந்த திருப்பத்தை சற்றும் எதிர்பார்க்காத பாஜக ஆதரவை ஏற்றுக் கொண்டது. ஆளுநரைப் பார்த்து ஆட்சி அமைக்க அழைக்குமாறும், தங்ளுக்கு ஆதரவாக 129 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளளது என்றும் கோரியது.
ஆனால் இந்த நாள் வரை ஆளுநர், பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதனால் கர்நாடகத்தில் இழுபறி நிலை நீடிக்கிறது.
ஆளுநரைக் கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டப் போராட்டத்தையும் பாஜக நடத்திப் பார்த்து விட்டது.
இந்த நிலையில் நாளை டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து அவர் முன்பு எம்.எல்.ஏக்களை நிறுத்தி ஆதரவை நிரூபிக்க பாஜக முடிவு செய்துள்ளது.
இதற்காக 129 எம்.எல்.ஏக்களும், இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்களும் இன்று மாலை டெல்லி கிளம்பிச் செல்கிறார்கள். முன்னதாக இரு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தனித் தனியாக நடந்தது.
இந்த நிலையில் இத்தனை நாள் தாமதித்து வந்த ஆளுநர் தாக்கூர், இன்று மத்திய அரசுக்கு கர்நாடகத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து அறிக்கை அனுப்பவுள்ளார். அனேகமாக சட்டசபை முடக்கத்தை நீக்கக் கோரி அவர் அறிக்கை அனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் டெல்லிக்குப் படையெடுத்திருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications