கார்-லாரி மோதல்: 3 பேர் பலி, மூவர் படுகாயம்
கோயம்புத்தூர்: முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் சென்ற முயன்ற கார், எதிரில் வந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே காரில் இருந்த 3 பேர் பலியாகி விட்டனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.
கோவையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(35). நிதிநிறுவனம் நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி மகேஸ்வரி(30) என்ற மனைவியும் யோகனாம்பாள்(7) என்ற மகளும், மணிகண்டன்(6) என்ற மகனும் இருக்கிறார்கள்.
இவர்கள் குடும்பத்துடன் தங்களது உறவினர் ராஜேஷை அழைத்துக் கொண்டு கரூர் அருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட தங்களது காரில் சென்றனர். இவர்களது காரை கோவையை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி வந்தார்.
கோவிலில் தரிசனம் செய்து விட்டு காரில் கோவைக்கு திரும்பி கொண்டிருந்தனர். கார் இன்று அதிகாலை வெள்ளக்கோவில் அருகே வரும்போது, டிரைவர் ராஜா முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றார்.
ஆனால் எதிர்பாராமல் எதிரில் வந்த லாரி மீது கார் பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே கார் டிரைவர் ராஜா, ராஜேஷ், சிறுவன் மணிகண்டன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பாலகிருஷ்ணன், அவரது மனைவி மகேஸ்வரி, மகள் யோகனாம்பாள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த மூவரையும் மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் கோவை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications