யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கொண்டாடும் தேமுதிக - கே.என்.நேரு
சென்னை: அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கூடுதலாக போனஸ் வாங்கிக் கொடுத்ததாக தேமுதிக சொல்லிக் கொள்வது, யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கொண்டாடுவது போல் உள்ளது என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கூடுதலாக போனஸ் வாங்கி கொடுத்ததாக தேமுதிக தலைவருக்கு நன்றி தெரிவித்து கடந்த 3ம் தேதி பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்குவதில் முனைப்புடன் செயல்பட்டது, செயல்பட்டு வருவது திமுக ஆட்சியும், முதல்வர் கருணாநிதியும் தான்.
கடந்த 1997-98ம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், மற்ற தொழிலாளர்களுக்கும் 20 சதவீத போனஸ் முதன்முதலாக வழங்கப்பட்டது. ஆனால், கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில், 20 சதவீத போனஸ் என்பது 8.33 சதவீதமாக குறைக்கப்பட்டது.
அதை எதிர்த்து திமுக கரல் கொடுத்தது. தற்போது விளம்பரப்படுத்திக் கொள்ளும் யாரும் அப்போது குரல் கொடுக்கவில்லை.
கடந்த வருடம் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், மீண்டும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கூடுதலாக போனஸ் கிடைக்க முழு காரணமாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி தான்.
யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கொண்டாடி விளம்பரம் செய்து கொண்டுள்ளவர்கள் அல்ல. எனவே கையில் காசு இருக்கிறது என்பதற்காக தவறான தகவல் கொடுத்து போலியாக விளம்பரம் தேடிக் கொள்ள முனைவது நல்லதல்ல என்று அமைச்சர் கே.என்.நேரு தேமுதிகவை தாக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications