தேவர் சிலை உடைப்பு: சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
திருநெல்வேலி: சங்கரன்கோவில் அருகே தேவர் சிலை உடைக்கப்பட்டதால் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள 91 சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள வேலாயுதபுரம் என்ற கிராமத்தில் தேவர் சிலையை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.
இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி நெல்லை-ராஜபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களை தடுப்பதறக்காக பதட்டம் அதிகமுள்ள பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள 61 தேவர் சிலை, 24 அம்பேத்கார் சிலை, 6 நினைவு சின்னங்கள் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிகளில் கடும் பதட்டம் நிலவி வருகிறது.