இலங்கையிலிருந்து மீண்ட மீனவர்கள் நாகை வந்தனர்
நாகப்பட்டனம்: இலங்கை மீனவர்களால் கடத்தப்பட்டு, இலங்கையில் சிறை வைக்கப்பட்டு பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்ட நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 99 மீனவர்களும் இன்று அதிகாலை நாகப்பட்டனம் வந்து சேர்ந்தனர்.
நாகை மாட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் 17 படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது இந்திய கடல் எல்லையைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 99 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்று விட்டது.
நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பின்னர் சிறைக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடத்தப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு இணை அமைச்சர் அகமதுவை முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார். இதையடுத்து மத்திய அரசு இலங்கை அரசைத் தொடர்பு கொண்டது.
மத்திய அரசின் நடவடிக்கையால், தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகள், மீன்பிடி வலைகள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் மீனவர்கள் அனைவரும் தங்களது படகுகளில் தமிழகத்திற்குக் கிளம்பினர். அவர்களுடன் இலங்கை கடற்படையினரும் உடன் வந்தனர்.
நேற்று இரவு கோடியக்கரை அருகே இந்திய கடலோரக் காவல் படையினரிடம், தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து கிளம்பி இன்று அதிகாலை நாகை துறைமுகத்திற்கு மீனவர்கள் வந்தடைந்தனர்.
அவர்களை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் தென்காசி ஜவஹர், மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் வரவேற்றனர்.
இலங்கையிலிருந்து மீண்டு வந்த மீனவர்களை கட்டிப்பிடித்தும், கண்ணீர் விட்டு அழுதும், அவர்களின் உறவினர்கள் வரவேற்றது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
பின்னர் மீனவர்கள் கூறுகையில், எங்களிடமிருந்து பறித்துக் கொண்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மீன்கள், சாட்டிலைட் கடல் வழிகாட்டும் கருவி, செல்போன்கள் உள்ளிட்டவற்றை இலங்கை கடற்படையினர் திருப்பித் தரவில்லை.
நாங்கள் சிரமப்பட்டு பிடித்து வைத்திருந்த மீன்களை எல்லாம் கடலில் போட்டு விட்டனர். அங்கிருந்து உயிர் பிழைத்து வந்ததே பெரிதாகப் போய் விட்டது. சிலருடைய படகுகளையும் கூட அவர்கள் சேதப்படுத்தியிருந்தனர் என்று கண்ணீர் மல்கக் கூறினர்.