பாமகவின் போக்கு: வீரபாண்டி ஆறுமுகம் கடும் கண்டனம்
சேலம்: சேலம் ரயில்வே கோட்ட துவக்க விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியினர் முதல்வர் கருணாநிதியை மதிக்காமல் நடந்து கொண்டனர் என்று தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, சேலம் ரயில்வே கோட்டத்துக்காக திமுக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்திருக்கிறது. கடந்த 1962ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினரானது முதல் ரயில்வே கோட்டத்துக்காக குரல் கொடுத்து வந்துள்ளேன். அனைத்துக் கட்சி எம்பிக்களின் தொடர் முயற்சியினால் தான் சேலம் ரயில்வே கோட்டம் கிடைத்தது.
முதலில் ரயில்வே கோட்ட தொடக்க விழாவையும் செப்டம்பர் 16ம் தேதி சேலத்தில் அரசு விழாவுடன் நடத்த ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஒப்புதல் தந்திருந்தார். ஆனால் ரயில்வே கோட்ட விழாவை தனியாக ரயில்வே விழாவாக நடத்த வேண்டும் என்று அந்தத் துறையின் இணையமைச்சர் ஆர்.வேலு மூலம் பாமக தலைமை முயற்சி செய்து அதைத் தடுத்துவிட்டது.
இதையடுத்து நவம்பர் 1ம் தேதி நடந்த ரயில்வே கோட்ட துவக்க விழாவில் மரபுகள் கடைபிடிக்கப்படவில்லை.
தங்கள் கட்சி பலத்தை காட்டுவதற்கு நடந்த விழா போல, பாமகவின் செயல்பாடு இருந்தது. விழாவில் முதல்வர் கருணாநிதி பேசும்போது, பாமகவினர் கொடி அசைத்து குரல் எழுப்புவதில் ஈடுபட்டனர். அவர்களை யாரும் அமைதிப்படுத்தவில்லை.
இதனால் அவர் தனது பேச்சை இடையிலேயே நிறுத்தும் நிலைமை ஏற்பட்டது. இது முதல்வருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை. இந்த செயலை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
கூட்டணி என்பதற்காக எதையும் சகித்துக் கொள்ள முடியாது. இனியும் பொறுமை தேவையா என்றே தோன்றுகிறது. விழாவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அமைச்சர் அன்புமணி, கட்சி தலைவர் ஆகியோர் இந்த மாவட்ட அமைச்சரான எனது பெயரைக்கூட குறிப்பிடவில்லை. இதுதான் அவர்களுடைய அரசியல் நாகரீ்கமா.
தென்னக ரயில்வே நடத்திய விழா மேடையில் மரபு கடைபிடிக்கப்பட்டதா. பாமக தலைவர் ஜி.கே.மணி மேடையில் அந்த கட்சி நிறுவனருக்கு அடுத்து அமர வைக்கப்பட்டது எப்படி.
நாங்கள் சந்திக்காத அரசியல் போக்கு இல்லை. யாராலும் எங்களை மறைக்க முடியாது என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.