சம்பத் மீதான தாக்குதல்: வேடிக்கை பார்த்த போலீஸ்- வைகோ
சென்னை: நாஞ்சில் சம்பத் மீது மதிமுக மேடையிலும் மதுரை சிறையிலும் நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்காமல் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர் என்று வைகோ கூறியுள்ளார்.
நாஞ்சில் சம்பத் தாக்கப்பட்டதை கண்டித்து வட சென்னை மதிமுக சார்பில் வைகோ தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வைகோ பேசியதாவது,
தமிழகத்தில் ஜனநாயகம் அழிக்கப்பட்டதை கண்டித்து இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். எதிர்க்கட்சிகள் எந்த கருத்தையும் மக்களிடம் எடுத்து சொல்ல முடியாத நிலை உள்ளது.
அரசுக்கு வேண்டிய ஒரு சிலர் (ராமதாஸ்) சொல்லும் விமர்சனங்களை மட்டும் ஆட்சியாளர்கள் எதிர்ப்பதில்லை. மற்றவர்கள் யாராக இருந்தாலும் இழிவு படுத்துவதையும், தாக்குவதையும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
அடுத்தவர்களுடைய விமர்சனத்தை தாங்கும் சக்தி ஆளும் கட்சிக்கு இல்லாவிட்டாலே அதற்கு ஆபத்து வந்துவிட்டது என்று தான் அர்த்தம்.
கட்சி மேடையில் நாஞ்சில் சம்பத் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் கலவரம் ஏற்பட்டுவிட்டது என்று விளக்கம் தருகிறார்கள். அவர் தாக்கப்பட்டது திட்டமிட்டு நடந்த சதி. அவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் நாஞ்சில் சம்பத்தை காவல்துறை கைது செய்துள்ளது.
மதுரை சிறை வளாகத்திலும் நாஞ்சில் சம்பத் தாக்கப்பட்டார். அதை தடுக்க வேண்டிய காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்தது கண்டிக்கத்தக்கதாகும். வரும் காலங்களில் காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றார் வைகோ.