முஷாரப்புக்கு மண்டேலா கண்டனம்
ஜோகன்னஸ்பர்க்: பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதற்கு நோபல் பரிசு பெற்ற உலகத் தலைவர்களான நெல்சன் மண்டேலா, ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எல்டர்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள குழுவின் சார்பாக மண்டேலா, கார்ட்டர், தென்னாப்பிரிக்காவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவரான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு, முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முஷாரப்பின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது. நீதிபதிகள், வக்கீல்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், மிதவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
பாகிஸ்தானில் சுதந்திரம் உருவாக விரும்பும், ஜனநாயகம் மலர விரும்பும் அனைவருக்கும், சர்வாதிகார செயல்களுக்கு எதிராக பாடுபடுவோருக்கும், பாகிஸ்தானில் மீண்டும் அரசியல் சட்டம் அமலுக்கு வரவும், ஜனநாயகத்தைக் கொண்டு வர பாடுபடுவோருக்கும் நாங்கள் முழு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
12க்கும் மேற்பட்ட நோபல் பரிசு பெற்றோர் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்கள் இணைந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் எல்டர்ஸ் அமைப்பைத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.