கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு
பெங்களூர்: கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதமாக அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து பாஜக கூட்டணி ஆட்சி அமைவதற்கு நிலவி வந்த முட்டுக்கட்டை விலகியது.
இந்த நிலையில் நேற்று சட்டசபை பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா ஆளுநர் தாக்கூரை ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார். அப்போது கர்நாடகத்தில் ஆட்சி அமைக்குமாறு ஆளுநர், எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியில் வந்த எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், முறைப்படி ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். திங்கள்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என்றார்.
அமைச்சரவை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்த எடியூரப்பா, இதுதொடர்பாக மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்படும்.
ஆலோசனைக்குப் பின்னர்தான் அமைச்சர்கள் எத்தனை பேர், யாருக்கு எந்தெந்த இலாகா என்பது குறித்து தீர்மானிப்போம்.
விரைவில் சட்டசபை கூட்டப்படும். அப்போது ஆட்சியின் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்படும் என்றார் எடியூரப்பா.
கர்நாடகத்தில்தான் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications