பள்ளிவாசல் பூட்டை உடைத்து தொழுகை செய்ததால் பரபரப்பு
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில், பள்ளிவாசல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தொழுகை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூரில் 1994ம் ஆண்டு முபாரக் பள்ளிவாசல் துவங்கப்பட்டது. இந்த பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சேக் உதுமான் தலைவராகவும், அப்துல் ஜலீல் செயலாளராகவும் இருந்து வந்தனர்.
சைபுல்லா ஹாஜா உள்பட பலர் நிர்வாக குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தனர். செயலாளராக இருந்த அப்துல் ஜலீல் மறைவிற்கு பிறகு பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
பள்ளிவாசல் தங்களுக்குதான் சொந்தம் என ஜாக் மற்றும் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் உரிமை கொண்டாடினர். இதையடுத்து பிரச்சனை கோர்ட்டுக்கு சென்றது. தென்காசி உரிமையியல் நீதிமன்றத்தில் ஜாக் அமைப்பினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து ஜாக் அமைப்பினர் இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்தினர்.
தவ்ஹித் ஜமாத் அமைப்பினரும் இதே பள்ளிவாசலில் தொழுகை நடத்த முற்படவே பிரச்சனை ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையின் போதும் அங்கு பதற்றம் ஏற்படவே நிரந்தரமாக பள்ளிவாசல் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையே தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் முபாரக் பள்ளிவாசல் நிர்வாக குழு சார்பாக தென்காசி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் தவ்ஹித் அமைப்புக்கு சார்பாக தீர்ப்பு வந்தது.
இதையடுத்து காலை இந்த அமைப்பினர் ஜாக் அமைப்பின் கட்டுபாட்டில் இருந்த பள்ளிவாசலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தொழுகை நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
இதுகுறித்து ஜாக் அமைப்பை சேர்ந்த முகமது சீராஜூதின் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். கடையநல்லூர் போலீசார் முபாரக் பள்ளிவாசல் பூட்டுக்களை உடைத்து உள்ளே நுழைந்ததாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில துணைத் தலைவர் சைபுல்லா ஹாஜா, பள்ளிவாசல் தலைவர் ஷேகனா மற்றும் நிர்வாகிகள் ரஹ்மதுல்லா, ஷேக் உதுமான், களந்தல் இப்ராஹீம் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.