தமிழக எதிர்ப்பை மீறி பாலாற்றின் குறுக்கே அணை - டிசம்பர் 6ல் அடிக்கல்
சித்தூர்: தமிழகத்தின் கடும் எதிர்ப்புகளையும் மீறி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டுள்ள ஆந்திர அரசு டிசம்பர் 6ம் தேதி அணைக்கான அடிக்கல்லை நாட்டவுள்ளது. இந்த விழாவில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வட மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வரண்டு போகும் அபாயம் எழுந்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசு இந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தையும் அணுகியது. மேலும் தமிழக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின.
தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக அணை கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த ஆந்திர அரசு தற்போது மீண்டும் அணை தொடர்பான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. சித்தூர் மாவட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை கட்டப்படவுள்ள பகுதியைப் பார்வையிட்டுள்ளனர்.
மேலும் அடிக்கல் நாட்டு விழாவுக்கும் தேதி குறிக்கப்பட்டு விட்டது. டிசம்பர் 6ம் தேதி அணை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ராஜசேகர ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்.
இது குறித்து சித்தூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம். சுப்பிரமணிய ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், குப்பம் தொகுதி விவசாயிகள் பாலாற்றில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குமாறு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
இதனால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். இதற்கான அடிக்கல்நாட்டு விழாவை டிசம்பர் மாதம் 6-ந்தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த அணை கட்டினால் குப்பம் தொகுதி விவசாயி கள் அதிக அளவில் பயன டைவார்கள். புதிதாக கட்டப்படவுள்ள பாலாறு அணையை யொட்டி துணை அணை ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் துணை அணையில் தேக்கி வைக்கப்படும் என்றார் அவர்.