கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எதியூரப்பா
பெங்களூர்: தென்னிந்தியாவின் முதல் பாஜக ஆட்சி இன்று கர்நாடகத்தில் மலர்ந்தது. முதல்வராக பி.எஸ்.எதியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கர்நாடக மாநில கவர்னர் ராமேஷ்வர் தாக்கூர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பகல் 12 மணிக்கு விதான செளதாவில் நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் எதிடியூரப்பாவும் அசோக், கோவிந்த் கர்ஜோல், டாக்டர் வி.எஸ்.ஆச்சார், ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய 4 அமைச்சர்களும் மட்டும் பதவியேற்றுக் கொண்டனர்.
துணை முதல்வராக யாரை நியமிப்பது என்பதில் தேவே கெளடாவின் குடும்பத்தில் சண்டை நடந்து வருவதால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் இன்று துணை முதல்வராக யாரும் பதவியேற்கவில்லை.
சட்டசபையில் வரும் 23ம் தேதி முதல்வர் எதிடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் துணை முதல்வரும் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்கவுள்ளனர்.
அதற்குள் துணை முதல்வர் யார் என்பதை ஜனதா தளம் முடிவு செய்யும். முதல்வராக குமாரசாமி இருந்துவிட்டதால் அவரது அண்ணன் ரேவண்ணாவுக்கே துணை முதல்வர் பதவியைத் தர வேண்டும் என கெளடாவை அவரது குடும்பத்தில் ஒரு பிரிவினர் நச்சரித்து வருகின்றனர். ஆனால், தானே துணை முதல்வராக குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.
கடந்த குமாரசாமி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 பேருக்கும் மீண்டும் அமைச்சர் பதவி தரப்படும் என்று தெரிகிறது.
சட்டசபை ஜ.தள தலைவர் குமாரசாமி:
முன்னதாக மதச்சார்பற்ற ஜனதாள எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் குமாரசாமி சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர் தேவெ கெளடாவும் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பின்னர் துணை முதல்வராக யார் பதவியேற்கப் போவது என்ற கேள்விக்கு குமாரசாமி பதிலளிக்கையில், இதுதொடர்பாக நான், தேவெ கெளடா, மாநில கட்சித் தலைவர் மீராஜூதின் படேல், மூத்த தலைவர் எம்.பி.பிரகாஷ் ஆகியோர் கூடி ஆலோசித்து அதன் பின்னர் முடிவு எடுக்கப்படும்.
எனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அனைத்து மதச்சார்பற்ற ஜனதாதள அமைச்சர்களும் ஒரே நேரத்தில் பதவியேற்றுக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
எங்களது கட்சி சார்பில் யார் யாருக்கு என்ன இலாகாக்கள் என்பது இன்னும் 2 அல்லது 3 நாட்களில் முடிவு செய்யப்படும் என்றார்.