கர்நாடக பாஜக அரசு காவிரிப் பிரச்சினையைத் தீர்க்கும்: இல.கணேசன்
கரூர்: கர்நாடகத்தில் அமைந்துள்ள புதிய பாஜக அரசு காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரமான சுமூக தீர்வைக் காணும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரூர் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருந்து வரும் காவிரிப் பிரச்சினைக்கு தற்போது புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு நிரந்தரத் தீர்வு காணுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்டு அமைக்கப்படும் புதிய மாவட்டம் சரியான நடவடிக்கை அல்ல. இதன் மூலம் அரியலூர் மாவட்டத்திற்கு 3 சட்டசபைத் தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நெருக்குதல் காரணமாகவே முதல்வர் கருணாநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
3வது அணியால் வெற்றிகரமாக செயல்பட முடியாது. அப்படிப்பட்ட வரலாறு இதுவரை இல்லை.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 1500 குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நவம்பர் 13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் இல.கணேசன்.