வைகோ, பழ. நெடுமாறன் புழல் சிறையில் அடைப்பு
சென்னை: சுப.தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலத்தை நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் ஆகியோர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் சமீபத்தில் இலங்கை விமானப்படையினரால் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தை பல்வேறு தமிழக கட்சிகள் கண்டித்திருந்தன. முதல்வர் கருணாநிதியும் கவிதை வடிவில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னையில் அமைதி ஊர்வலம் நடத்த தமிழீழ விடுதலை ஆதரவாளர் அமைப்பும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானித்தன. இந்த ஊர்வலத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
ஆனால் இந்தப் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியிருந்தது. இந்த நிலையில் பேரணிக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. ஆனால் தடையை மீறி பேரணியை நடத்துவோம் என பழ.நெடுமாறனும், வைகோவும் அறிவித்தனர்.
அதன்படி நேற்று மாலை சென்னை மன்ரோ சிலை அருகே வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் கூடிய நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழ்ச்செல்வனின் படங்களைக் கையில் ஏந்தியபடி வந்தனர்.
ஆனால் வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். பின்னர் அனைவரும் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 360 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 14 பேர் பெண்கள் ஆவர்.
பின்னர் எழும்பூர் 6வது குற்றவியல் பெருநகர நீதிபதி மைதானத்திற்கு வந்தார். அங்கு அனைவரையும் 15 நாள் காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார். பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் பெரியார் பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஆனைமுத்து என்பவரை மட்டும் அவருடைய வயது காரணமாக விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
வைகோ உள்ளிட்டோர் மீது மீது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயன்றது, தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தது ஆகிய குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இதனையடுத்து வைகோ, பழ.நெடுமாறன் உட்பட அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications