ராமர் பால வழக்கு: டிச.11ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி: ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை டிசம்பர் 11ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட சிலர் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராகவும், ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று தடை கோரியும், அதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு பரிலீசிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ராமர் இருந்தாரா, ராமர்தான் பாலத்தைக் கட்டினாரா என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. இவை எல்லாம் கற்பனைக் கதாபாத்திரங்கள் என்று தெரிவித்திருந்தது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தப் பதில் மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு புதிய பதில் மனுவைத்தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் விசாரணையை டிசம்பர் 11 ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள் அன்றைக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications