இரு லாரிகள் மோதலில் ஒருவர் பலி-செங்கல்பட்டு-சென்னை போக்குவரத்து கடும் பாதிப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே இரண்டு லாரிகள் மோதிக்கொண்டதில் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தால் செங்கல்பட்டு-சென்னை நெடுஞ்சாலையில் 5 மணிநேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
திண்டிவனத்திலிருந்து சவுக்குக் கட்டைகளை ஏற்றி வந்த லாரி ரிப்பேராகி செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வழியாக திருச்சியிலிருந்து மைதா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்னை வந்த லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லாரி கிளீனர் முத்துகிருஷ்ணன்(22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி டிரைவர் கோபால் கீழே குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்தால் நெடுஞ்சாலை முழுவதும் அடைபட்டுவிட்டது.
இதனால் சென்னையிலிருந்து வந்த வாகனங்களும், சென்னை சென்ற வாகனங்களும் செங்கல்பட்டு நகருக்குள் திருப்பி விடப்பட்டன. இதனால் நகருக்குள் சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிந்தன.
5 மணி நேரத்திற்கு மேலாக செங்கல்பட்டு-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த விபத்துக்கு காரணமான பழுதாகி நின்ற லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.