விமானங்களில் 'மது': எம்.பி.க்கள் கோரிக்கை
டெல்லி: உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் போது குடிக்க மது பானம் தர வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் விமானத்துறையை மேம்படுத்த தனிக்குழு உள்ளது. இந்தக் குழுவில் எம்.பி.க்களும் அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழுவினுடைய ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் தலைமை வகித்தார். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி உட்பட ஏராளமான எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
அப்போது விமான சேவையில் வருவாயை அதிகரிக்க பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அதில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த எம்.பிக்கள், உள்நாட்டு விமானங்களில் இந்திய தயாரிப்பு மது வகைகளான ஒயின், பிராந்தி போன்றவற்றை கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
பிராந்தி, ஒயின் தயாரிப்பில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது நலனை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.
இதைக் கேட்ட அமைச்சர் பிரபுல் படேல், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் மட்டும் தான் மதுபானங்கள் கொடுக்கப்படுகின்றன. உள்நாட்டு விமான சேவைகளில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக இந்திய தயாரிப்பு மது வகைகளை உள்நாட்டு விமானங்களில் பயன்படுத்த வேண்டும் என்பதை பெரும்பாலானோர் ஆதரித்துள்ளனர்.
இதுகுறித்து விரைவில் பரிசீலித்து உரிய முடிவு அறிவிக்கப்படும் என்றார் பிரபுல் படேல்.












Click it and Unblock the Notifications