சென்னையில் திடீர் கடல் கொந்தளிபபு, வீடுகளுக்குள் நீர்-பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: சென்னையில் திடீர் கடல் கொந்தளிப்பால் வீடுகளுக்குள் நீர் புகுந்தது. இதையடுத்து கடலோரப் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் தற்போது அந்தமான்-நிகோபாரை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு ஆபத்து கிடையாது என்றாலும் அந்த புயலின் சீற்றத்தால் தமிழக கடலோரப் பகுதிகளான நாகை, கோடியக்கரை, கடலூர், புதுச்சேரி மற்றும் சென்னையில் கடலின் சீற்றம் கடந்த சில நாட்களாக அதிகமாகு இருந்து வருகிறது.
இந்த புயலால் மீனவர்கள் எவரையும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந் நிலையில் வட சென்னையின் கடலோரப் பகுதிகளான திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம் பகுதிகளில் திடீரென்று கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. கடலோரப் பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்தது.
திடீரென்று கடல் நீர் வீட்டுக்குள் புகுந்ததை பார்த்த மக்கள் சுனாமி தான் வந்து விட்டது என்று அலறியடித்துக் கொண்டு குழந்தைகளுடன் ஓட்டம் பிடித்தனர்.
திருவொற்றியூர் அப்பர்மேடு பகுதியில் உள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்ததில் சில வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதிகளில் தொடர்ந்து கடல் அரிப்பும் ஏற்பட்டு வருகிறது.
மெரீனா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை ஆகிய பகுதிகளிலும் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால் மக்கள் எவரையும் கடற்கரை பகுதிக்கு போலீசார் அனுமதிக்கவில்லை.
பள்ளிகளுக்கு விடுமுறை:
திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கடல் கொந்தளிப்பு இருந்ததால் அப்பகுதியில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.
கடல் கொந்தளிப்பால் வீடுகளுக்கு செல்ல முடியாத மக்கள் அப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் சமூகநல மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இன்னமும் கடலின் சீற்றம் குறையாததால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் வீதிகளில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications