நில மோசடி-பீட்டர் அல்போன்ஸ் நண்பர் கைது
திருநெல்வேலி: தென்காசி அருகே போலி பத்திரம் தயார் செய்து நில மோசடி செய்த, காங்கிரஸ் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்ஸின் நண்பரான பேரூராட்சி துணைத் தலைவரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல் சேவியர். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு இதே கிராமத்தில் 246 ஏக்கர் பரப்பளவிலான குடும்பச் சொத்து உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும்.
இந்த நிலத்தை இதேப் பகுதியை சேர்ந்த போஸ்ட் மாஸ்டர் துரை ராஜா என்ற அந்தோணி சவரிமுத்து, மைக்கேல் சேவியரின் தந்தை பெயரை தனது தந்தை பெயராக குறிப்பிட்டு போலி பத்திரம் மூலம் தனது உறவினரான ஆயக்குடி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அந்தோணி வியாகப்பனுக்கு விற்றுவிட்டார்.
இந்த மோசடிக்கு அந்தோணி வியாகப்பனின் மகன் கார்வின் மற்றும் நாராயணன், டெய்லர் ஜான் கென்னடி, ஆனந்த் ஆகியோர் உடந்தையாகவும் இருந்துள்ளனர். இந்த மோசடி குறித்து மைக்கேல் சேவியருக்கு தெரியவந்தது.
உடனே அவர் காவல் துறையினரிடம் புகார் செய்தும் பலனின்றி போனதால் நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பனிடம் புகார் செய்தார். அவர் உடனடியாக மாவட்ட எஸ்.பி ஸ்ரீதர் மூலம் குற்றப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி வழக்கு பதிவு செய்து துரைச்சாமி என்ற அந்தோணி வியாகப்பனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள அந்தோணி வியாகப்பன் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்சுக்கு மிகவும் நெருங்கிய நண்பராம்.
இவர் மூலம் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், அதன் பின்னர் பனைவாரியக் குழு பதவியும் கிடைத்தது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications