திமுக செயலாளர் படுகொலை- திருவாரூரில் அரசுப் பேருந்துகள் எரிப்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அம்மாவட்டத்தில் 4 அரசு பேருந்துகள் எரிக்கப்பட்டன.
இன்று காலை 6 மணியளவில் திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வனின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டும் அரிவாள்களால் வெட்டியும் கொன்றது.
இந் நிலையில் கலைச்செல்வன் உடல் வைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை முன்பாக திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
அப்போது திருவாரூரிலிருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த 4 அரசுப் பேருந்துகளை மறித்து பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு திமுகவினர் தீ வைத்தனர்.
சிறிது நேரத்தில் 4 பேருந்துகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானன. இதுதவிர 4 மேலும் அரசு பேருந்துகள் மீது கற்களை வீசி தாக்கியதில் பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுங்கின.
இந்தக் கொலையாலும் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதாலும் அப்பகுதியில் கடும் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.