திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் படுகொலை: கொலையாளிகள் பிடிபட்டனர்?
திருவாரூர்: திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் அவரது வீட்டில் வைத்து ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் பூண்டி கலைச் செல்வன். மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் இருந்த இவரது வீடு திருவாரூரை அடுத்த கொரடாச்சேரியை அடுத்த பூண்டியில் உள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன் கொரடாச்சேரியை சேர்ந்த அதிமுகவின் ஒன்றியச் செயலாளர் சம்பத் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக பூண்டி கலைச்செல்வன் மீது நீதிமன்றத்தில் கொலை வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 6 பேர் கொண்ட கும்பல் திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக பூடியின் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டிற்கு வெளியில் இருந்தவர் அவர்களை சிறிது நேரம் காத்திருக்குமாறு சொன்னதற்கு அந்த கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. அவர்கள் வானத்தை நோத்தி துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கிருந்த திமுக தொண்டர்கள் சிதறி ஓடினர். குண்டு சத்தம் கேட்டு கலைச்செல்வன் வெளியே வந்தார். அப்போது அவரை அந்தக் கும்பல் சரமாரியாக அரிவாள்களால் வெட்டியது. இதில் அவருக்கு தலை, கை, கால் பகுதிகளில் வெட்டு விழுந்தது.
இதைத் தொடர்ந்து அந்தக் கும்பல் டாடா சுமோ காரில் ஏறித் தப்பிவிட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பூண்டி கலைச்செல்வனை திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் சிறிது நேரத்தில் இறந்தார்.
அதிமுக ஒன்றியச் செயலாளர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் மற்றும் திமுகவினர் அப் பகுதியில் குவிந்தனர்.
கருணாநிதி இரங்கல்:
இந்தக் கொலைக்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனமும் இரங்கலும் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் தம்பி பூண்டி கலைச்செல்வன் இன்று கொடியோர் சிலரால் படுகொலை செய்யப்பட்டார் என்ற பதைபதைக்கும் செய்தி எனது நெஞ்சத்தில் கொடுவாளாகப் பாய்ந்தது.
சொல்லொணாத் துயரமும் வேதனையும் என்னை வாட்டுகின்றன. கண்ணீர் விட்டு அழுதாலும் கதறிப் புலம்பினாலும் வதைத்திடும் துக்கம் வடியாது.
சுழன்று சுழன்று கழகப் பணியாற்றி வந்த காளையைப் பிரிந்து வாடும் கலைச்செல்வனின் குடும்பத்தார்க்கும் உற்றார் உறவினர்க்கும் கழகத்தின் உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
திமுக நிகழ்ச்சிகள் ரத்து:
கலைச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 17, 18, 19 ஆகிய 3 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் திமுகவின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த மூன்று நாட்களும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொலையாளிகள் பிடிபட்டனர்?:
கலைச்செல்வனின் கொலையைத் தொடர்ந்து முக்கிய சாலைகளில் போலீசார் உடனடியாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூர் அருகே சிங்களாஞ்சேரி என்ற பகுதியில் ரயில்வே கேட் அருகே வந்த டாடா சுமோ காரில் 5 பேர் ரத்தக் கறைகளுடனான ஆடையுடன் இருந்தனர். இதையடுத்து 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்டாலின் விரைந்தார்:
இந்தக் ெகாலை சம்பவம் குறித்து அறிந்தவுடன் விழுப்புரம் மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஸ்டாலின் அக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக திருவாரூர் புறப்பட்டுச் சென்றார்.
முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூரிலேயே திமுக மாவட்டச் செயலாளர் கொலை செய்யப்பட்டது அக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications