மக்களை தேடிச் சென்ற கரூர் எம்பி
கரூர்: கரூர் எம்.பியான பழனிச்சாமி மக்களை தேடிச் சென்று குறைகளைக் கேட்டு மனுக்களை வாங்கினார்.
கரூர் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கே.சி.பழனிசாமி. இவர் தனது தொகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தை நடத்தி, மக்களிடம் நேரில் மனுக்களை வாங்கி வருகிறார்.
வேட்டமங்கலம், வாங்கல், மன்மங்கலம், செவ்வந்தி பாளையம், நெரூர் ஆகியப் பகுதிகளில் முகாம்கள் நடத்திய அவரிடம் நூற்றுக்கணக்கான மக்கள் குறைகளைத் தெரிவித்து மனு அளித்தனர்.
இதில் பெரும்பாலானவர்கள் இலவச வீட்டு மனை, தொகுப்பு வீடுகள், இலவச கலர் டிவி, முதியோர் உதவி தொகை, கல்வி கடன், விவசாய அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மனு கொடுத்தனர்.
தன்னுடன் முகாமில் அரசு அதிகாரிகளையும் பங்கேற்கச் செய்கிறார். அவருடன் முகாமில் ஆர்.டி.ஒ. சீதாலட்சுமி, தாசில்தார் நவாஸ் பாட்ஷா, மாவட்ட மறுவாழ்வு அலுவலர் ஜோஸ்மின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.