அமைச்சருக்காக நின்ற பூஜை-பாஜக கண்டனம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனின் வருகைக்காக பூஜைகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக பாஜக மாநில துணைத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
சூரசம்ஹாரம் அசுரனை ஒழித்த வெற்றி விழா. சூரனை அழித்த பிறகு இறைவனுக்கு அபிஷேகம் செய்து திருக்கல்யாணம் நடத்தி விரதத்தை முடிப்பது கோடான கோடி பக்தர்களின் வழக்கம்.
திருச்செந்தூரில் அப்படிப்பட்ட சூரசம்ஹார விழாவில் சூரனை வதம் செய்த பிறகு, ஜெயந்தி நாதருக்கு ஆலயத்தினுள் முதல் பிரகாரத்தில் 108 மகாதேவர் முன்பு கண்ணாடி அபிஷேகம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் ஒரு மணி நேரத்தில் முடிந்து விடும்.
ஆனால் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பிறகு 1.45 மணி நேரம் அபிஷேகம், பூஜைகள் நடைபெறவில்லை. காரணம் கேட்டதற்கு, கோவில் அர்ச்சகர்கள் அறநிலையத்துறை அமைச்சர் வருகிறார். அவர் வராமல் பூஜைகள் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு கொதித்தெழுந்த பக்தர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னர் பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 1.45 மணி நேரம் பூஜைகள் நடத்தப்படாமல் காத்திருந்த பிறகும் கூட அமைச்சர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் முக்கியமான இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அமைச்சருக்கு பணிவிடை செய்ய அதிகாரிகள் அனைவரும் சென்றுள்ளனர். இது இந்து தர்மத்தை, ஆலய விதிமுறையை மீறிய செயலாகும்.
ஒரு அமைச்சருக்காக கோடிக்கணக்கான பக்தர்களை காக்க வைத்து பூஜையை நிறுத்தியது ஏன்? இதற்கு காரணமான அமைச்சர் மீதும், அதிகாரிகள் மீதும் முதல்வர் கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றார்.