முதல்வர் கருணாநிதிக்கு மீண்டும் கொலை மிரட்டல்
சென்னை: முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டிற்கு அருகே உள்ள கோபால சுவாமி கோவில் குருக்களுக்கு கடந்த மாதம் ஒரு மர்ம கடிதம் வந்தது.
அதில், கருணாநிதி இந்துக்களுக்கு எதிரானவர். இதனால் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு வந்தால் பிரசாதம் கொடுக்கக் கூடாது. மீறினால், முதல்வர் குடும்பத்தினர் வரும்போது, கோவிலை குண்டு வைத்து தகர்ப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் 3 நாட்களுக்கு முன் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது.
தீவிரவாத தலைவன் கிருஷ்ணமூர்த்தி (தமிழன்) என்ற பெயரில் வந்த அந்த கடிதத்தில், உன் கணவர் மக்களை ஏமாற்றுகிறார் என்று கூறி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இது குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.