சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம்-தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
ஹைதாராபாத்: விவசாயிகளுக்கு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை கொடுக்கக் கோரி ஆந்திர சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.எல்.ஏக்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1,000 அறிவிக்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 32 எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.
இன்று காலை சட்டசபை கூடியதும், மீண்டும் நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலை குறித்த அதே பிரச்சனையை எதிர்கட்சியினர் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. கவுன்சில் தலைவர் ஏ.சக்ரபாணி இது குறித்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை.
இதனால் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் சட்டசபை தலைவர் இருக்கையின் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் சக்ரபாணி, சட்டமன்ற விவகாரத் துறை அமைச்சர் ரோசையாவிடம் சபை அமைதியாக நடக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.
இதனை தொடர்ந்து ரோசையா சட்டசபை இருக்கை முன் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய 12 தெலுங்கு தேச எம்.எல்.ஏக்களையும், 2 தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி எம்.எல்.ஏக்களையும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து 14 எம்.எல்.ஏக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து மற்ற எதிர்கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் மாநிலத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சில்லரை வர்த்தகத்தில் நுழைவதால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி தரக்கூடாது என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications