பெட்ரோல்-டீசல் விலை விவகாரம்: அமைச்சர் குழுவை அமைத்தார் பிரதமர்
டெல்லி: பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துவது குறித்து முடிவு செய்ய அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 90 டாலர்களாக உள்ளது.
ஆனால், அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் வாயுவின் விலையை உயர்த்தாதால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு தினந்தோறும் ரூ.25 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு மட்டும் இந்த நிறுவனங்களுக்கு ரூ.70,500 கோடி நஷ்டம் ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பெட்ரோலியப் ெபாருட்களின் விலை இந்தியாவில் மிக தாறுமாறாக இருப்பதற்கு அதன் மீது விதிக்கப்படும் மிக அதிகமாக வரிகளே காரணம் என்பதால் முதலில் வரிகளைக் குறைத்து விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இடதுசாரிகள் கோரி வருகின்றன.
இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ. 13 வரை மத்திய அரசுக்கு இறக்குமதி வரி, சுங்க வரியாக செலுத்துகின்றன.
இந்த வரியையும் சேர்த்து நம் தலையில் கட்டுகின்றன.
(ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் செலுத்தும் ரூ. 52யில் ரூ. 17 வரை வரியாக மத்திய அரசுக்குப் போகிறது).
இதனால் இந்த வரிகளைக் குறைத்தாலே பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்திவிட முடியும், மக்களும் தப்ப முடியும்.
ஆனால், மறைமுகமாக இப்படி வரியை வசூலித்துவிட்டு பின்னர் மானிய விலையில் சமையல் கேஸ், மண்ணெண்ணெய் வழங்குவதாக மத்திய அரசு கூறுகிறது.
வரியைக் குறைத்தால் தனது நஷ்டத்தை சரி செய்யலாம் என பெட்ரோலிய அமைச்சகம் கூறுவதை நிதியமைச்சகம் ஏற்க மறுத்து வருகிறது.
இதனால் வரி வசூல் குறைந்து நிதித்தட்டுப்பாடு எழும் என நிதித்துறை கூறுகிறது. ஆனால், உலகிலேயே பெட்ரோலியப் பொருட்கள் மீது மிக அதிகமாக வரி விதிக்கும் நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடகத்தக்கது.
இந்த குழப்படிகள், நெருக்கடிகள், விலைவாசியால் மக்களின் கோபம் என பல தரப்பட்ட சிக்கல்களில் மாட்டியுள்ள மத்திய அரசு இந்தப் பிரச்னை குறித்து விரிவாக விவாதித்து ஒரு முடிவுக்கு வர ஒரு அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
ஆசியான் மாநாட்டில் பங்கேற்க சிங்கப்பூர் புறப்பட்ட அவர் இதனைத் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் குழு ஒரு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்யுமாம். ஆனால், இந்தக் குழுவில் உள்ள அமைச்சர்கள் யார், இதற்கு யார் தலைவர் போன்ற விவரங்களை தெரிவிக்க பிரதமர் மறுத்து விட்டார்.
வெளியுறவு அமைச்சசர் பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சர் சிதம்பரம், பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. முகர்ஜி தான் இதன் தலைவர் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications