சங்கரன்கோவில் அருகே பெண் வெட்டிக் கொலை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே நடந்த நிலத்தகராறில் பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில், குருவிகுளம் அருகேயுள்ள அழகுநேரி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவரின் மனைவி காந்திமதி தனக்கு சொந்தமான நிலத்தை அதே ஊரை சேர்ந்த செல்லையா மகன் அப்பாத்துரை என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார்.
இந்நிலையில் காந்திமதியிடம் உள்ள மேலும் ஒரு பகுதி நிலத்தை தனக்கு குத்தகைக்கு தருமாறு அப்பாத்துரை கேட்டு வந்தார். ஆனால் காந்திமதி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் அப்பாத்துரை தனது உறவினர்கள் சண்முகையா, அண்ணாத்துரை, வீரபாண்டி ஆகியோருடன் காந்திமதி வீட்டிற்கு சென்றார். அங்கு அவரிடம் மீதி நிலத்தையும் குத்தகைக்கு தருமாறு கேட்டு மிரட்டியுள்ளனர்.
ஆனால் இதற்கு காந்திமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த அப்பாத்துரை தனது உறவினர்களுடன் சேர்ந்து காந்திமதியை அரிவாளால் சரிமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் அதே இடத்திலேயே துடிதுடிக்க இறந்துவிட்டார்.
காந்திமதியை வெட்டி கொலை செய்த 4 பேரும் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்ததும் சங்கரன்கோவில் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் சவுந்திரராஜன், சேகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
குருவிகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அப்பாத்துரை உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.