போலி ஆவண 'பலே ஆசாமிகள்' கைது-9 கார்கள் பறிமுதல்
தென்காசி: போலி ஆவணங்களைக் காட்டி நூதன முறையில் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 9 கார்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி, இடைகாலையைச் சேர்ந்தவர் மகேஷ் பாண்டியன். இவர் தென்காசியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
சீவநல்லுரை சேர்ந்த சுப்பையா செட்டியார் மகன் முத்துகுமார், வெள்ளபாண்டி மகன் பழனி ஆகிய இருவரும் மாருதி கார் ஆவணங்களை காட்டி மகேஷ் பாண்டியனிடம் ரூ.1.5 கடன் வாங்கியுள்ளனர்.
கடன் வாங்கியதிலிருந்து இவர்கள் ஒழுங்காக தவணையை செலுத்தாமல் இருந்துள்ளனர். அதனால் மகேஷ் பாண்டியன் கடன் தொகையை கேட்டதற்கு, முத்துக்குமாரும், பழனியும் சேர்ந்து பணம் தரமுடியாது என்று கூறியதுடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து மகேஷ்பாண்டியன் ஆய்க்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் முத்துகுமார், பழனி மற்றும் சிலர் சேர்ந்து திருட்டு வாகனங்களை வாங்கி அதன் எண்களை மாற்றி போலியாக ஆவணங்களை தயாரித்து நிதி நிறுவனங்களில் கடன் பெற்று ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.
நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பன், மாவட்ட எஸ்.பி ஸ்ரீதர் ஆகியோரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 9 கார்களையும் பறிமுதல் செய்தனர். இந்த 9 கார்களின் இன்ஜின் நம்பரை மாற்றியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட கார்களின் இன்ஜின் நம்பரை மாற்றி போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இயங்கி வரும் கார் எண் தென்காசி பகுதியிலும் ஓடியுள்ளது. கேரளாவில் உள்ள கார் என்ஜின் எண் இங்குள்ள கார்களில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கார்களில் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். அனைத்து கார்களுக்கும் நிதி நிறுவனத்தில் போலியாக ஆவணங்களை காட்டி பணம் பெற்று ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு உதவியவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா, என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துகுமார், பழனி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஜெயக்குமார் அவ்விருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.