குற்றாலநாதருக்கு மூலிகைத் தைலத்தால் அபிஷேகம்
தென்காசி: குற்றாலத்தில் உள்ள அருள்மிகு குற்றாலநாதர் கோவிலில், சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக மூலிகை தைலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோவில் முன்பு பெருமாள் கோவிலாக இருந்தது. அப்போது குற்றாலம் வந்த அரும் தமிழ் தந்த குறுமுனி அகஸ்தியர் முனிவரை கோவிலுக்குள் விட மறுத்து விட்டனராம்.
இதனால் அகஸ்திய முனிவர், பெருமாள் கோவிலை சிவன் கோவிலாக மாற்றி விட்டாராம். இதற்காக மூலவர் தலைமீது அகஸ்தியர் கை வைத்து அழுத்தியுள்ளார். அதனால் பெருமாள் சிவலிங்கமாக மாறியுள்ளார். அகஸ்தியர் தலையில் கை வைத்து அழுத்தியதால் சிவனுக்கு தலை வலி ஏற்பட்டதாம்.
சிவனுக்கு ஏற்பட்ட வலியை போக்க அகஸ்தியரும், அவரது சிஷ்யர்களும் சேர்ந்து மூலிகை தைலம் காய்ச்சி அதனை சிவனுக்கு அபிஷேகம் செய்துள்ளனர். இதன் பின்னர் தான் சிவனின் தலை வலி நீங்கியதாக ஐதீகம் உள்ளது.
இதன் அடிப்படையில் குற்றாலநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மூலிகை தைலம் காய்ச்சப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் நடந்தப்பட்டு வந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக மூலிகை அபிஷேகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு மூலிகை தைலம் தயாரிக்கும் பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.
பழங்காலத்து பெரிய அண்டாவில் மூலிகை தைலம் தயாரிக்கப்பட்டது. 48 வகையான அரிய வகை மூலிகைகள், 80 இளநீர், 6 கிலோ சந்தனம், 60 லிட்டர் பசும்பால், 64 லிட்டர் நல்லெண்ணெய் ஆகியவை அடங்கிய கலவை 50 நாட்கள் அடுப்பில் வேக வைக்கப்பட்டு மூலிகை தயாரிக்கப்பட்டது.
இப்பணி நிறைவடைந்ததை அடுத்து மூலிகை தைலத்திற்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டன.
தினமும் மூலிகை தைலம் மூலம் குற்றாலநாதருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டு பின் அந்த தைலம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
தலைவலி, கழுத்துவலி, கை, கால் வலி உள்ளிட்ட வலிகளை இந்த மூலிகை குணமாக்கும். இதனால் பக்தர்கள் இந்த தைலத்தை வாங்கிச் சென்று பயன்படுத்துவது வழக்கம்.