பறவைக் காய்ச்சல் பீதி: செளதியில் கொல்லப்பட்ட 30 லட்சம் கோழிகள்!
ரியாத்: செளதி அரேபியாவில் பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக 30.2 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.
எச்.5என்1 வகை ஏவியான் ப்ளூ காய்ச்சல் பரவுவதைத் தடுக்க செளதி அரேபிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்நாட்டில் உள்ள 10 கோழிப் பண்ணைகளில் இருந்த 30.2 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டு விட்டதாக செளதி விவசாயத்துறை அமைச்சர் பாத் பல்குனாய்ம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரியாத்தில் உள்ள ஏழு பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 3 பண்ணைகளிலும் வைரஸ் பரவக் கூடும் என அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த 10 பண்ணைகளிலும் உள்ள கோழிகளைக் கொல்ல உத்தரவிடப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.
மேற்கு ஆசிய நாடு ஒன்றில் இந்த அளவுக்கு அதிக அளவிலான கோழிகள் கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
கோழிப்பண்ணைகளில் பெருமளவில் முதலீடு செய்துள்ள விவசாயிகளுக்கு அதற்குரிய இழப்பீடு தரப்படும்.
வைரஸ் பரவியுள்ள கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளைக் கொல்வது, கோழித் தீவணங்களை அழிப்பது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கோழிப்பண்ணைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிற நாடுகளிலிருந்து வரும் கோழிகள் உள்ளிட்ட பறவைகளால்தான் சவூதியில் பறவைக் காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளது. மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு செல்லும் பறவைகள் சவூதி வழியாகத்தான் செல்கின்றன. இதனால்தான் சவூதியில் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவியுள்ளது.
எனவே வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வகையான பறவைகள் (லவ் பேர்ட்ஸ் கிளிகள் உள்ளிட்டவை) சவூதிக்கு கொண்டு வரப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பறவை வேட்டைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவூதியைச் சேர்ந்த பிற பகுதிகளிலிருந்து உயிருடனோ அல்லது இறந்த கோழிகளை வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
பறவைக் காய்ச்சல் காரணமாக ரியாத்தில் உள்ள பெரிய மார்க்கெட் மூடப்பட்டு விட்டது.












Click it and Unblock the Notifications