ஜாகுவார், லேண்ட் ரோவரை வாங்கும் டாடா
லண்டன்: போர்ட் நிறுவனத்திடம் இருந்து ஜாகுவார், லேண்ட்ரோவர் ஆகிய கார்கள் தயாரிப்புப் பிரிவுகளை டாடா நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளது.
டாடாவின் இந்த முயற்சிக்கு போர்ட் நிறுவனத்தின் முக்கிய ெதாழிற்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகியவை மிக அதிக விலை கொண்ட கார்களாகும். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க சந்தையில் நஷ்டத்தை சந்தித்து வரும் போர்ட் நிறுவனம் இந்த கார் தயாரிப்புப் பிரிவை விற்க முடிவு செய்தது.
இதை வாங்க உலக அளவிலான கார் தயாரிப்பு நிறுவனங்களிடையே கடும் போட்டி எழுந்தது. இந் நிலையில் தான் டாடாவும் போட்டியில் குதித்தது. டாடா நிறுவனத்தின் பண பலம், தொழிலில் நேர்மை, தயாரிப்புத் திறன், தொழிலாளர் நலனை காப்பது ஆகியவற்றை ஆராய்ந்த போர்ட் தொழிலாளர்களின் சங்கம் டாடாவிடமே இந்தப் பிரிவுகளை விற்குமாறு கூறியுள்ளது.
இந்தப் பிரிவுகளை வாங்க டாடா 1.3 பில்லியன் முதல் 1.5 பில்லியன் டாலர்கள் வரை விலை கொடுக்கும் எனத் தெரிகிறது.
முன்னதாக இந்தப் பிரிவுகளை வாங்க விரும்பிய டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து தாங்கள் வழங்கும் வசதிகள் குறித்து விளக்கினர். ஆனால், அதில் டாடா நிறுவனத்தின் உறுதிமொழிகளே தொழிலாளர் சங்க நிர்வாகிகளை கவர்ந்தன.
இதையடுத்து இதை டாடாவிடம் விற்க அவர்கள் வாக்களித்தனர். இதை வாங்க இந்தியாவின் மகிந்திரா அண்ட் மகிந்திராவும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.