ஐசிஐசிஐ வங்கிக்கு மீண்டும் அபராதம்
புனே: கடன் வாங்கிய பெண் ஒருவர் தவணை தொகையை சரியாக செலுத்தாததால் ஏஜெண்டுகள் என்ற பெயரில் ரவுடிகளை அனுப்பி பணத்திற்கு பதிலாக காரை பிடுங்கிய ஐசிஐசிஐ வங்கிக்கு புனே நுகர்வோர் ஆணையம் அபராதம் விதித்தது.
சமீபத்தில் வாகன கடன் பாக்கி வசூலிக்க கலெக்சன் ஏஜெண்டுகள் என்ற பெயரில் ரவுடிகளை பயன்படுத்தியதாக ஐசிஐசிஐ வங்கிக்கு டெல்லி நுகர்வோர் ஆணையம் ரூ.55 லட்சம் அபராதம் விதித்தது. இந்த அபராதம் விதித்து 1 மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் மீண்டும் 1 லட்ச ரூபாய் அபராதம் ஐசிஐசிஐ வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் வங்கிகளில் கடன் வாங்குபவர்கள் தவணை தொகையை சரியாக செலுத்தாவிட்டால், அவர்களின் கடன் பாக்கியை அந்த வங்கிகள் வசூல் செய்வதற்கு கலெக்சன் ஏஜெண்டுகளை நியமித்துள்ளன.
ஆனால் கலெக்சன் ஏஜெண்டுகள் நடந்து கொள்ளும் விதம் மிகவும் கொடூரமானது. ரவுடிக் கும்பலை விட மிகவும் அநாகரீகமாவும், மட்டமாகவும் நடந்து கொள்கிறார்கள்.
கடந்த 2003ம் ஆண்டு ரேணு பந்த்வால்கர் என்பவர் ஐசிஐசிஐ வங்கியில் ரூ.4 லட்சம் தனிநபர் கடன் வாங்கியிருந்தார். சரியாக மாதத் தவணை செலுத்தி வந்த ரேணு சில மாதங்கள் தவணைத் தொகையை சரியாக செலுத்த முடியாமல் போனது.
இதற்காக அவர் வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருந்த பணத்திலிருந்து தன் பெயருக்கு வரும் செக்கிற்கு பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு வங்கியில் கேட்டுக் கொண்டார். ஆனால் வங்கி ஊழியர்களின் கவனக்குறைவால் செக்கை ரிட்டர்ன் செய்துவிட்டனர்.
இது ரேணுவிற்கு தெரியவில்லை. திடீரென்று ஐசிஐசிஐ வங்கி ஏஜெண்டுகள் (ரவுடிகள்) என்று சொல்லிக் கொண்டு வந்த சிலர் கடன் தவணை தொகையை செலுத்தாதற்காக அவர் வைத்திருந்த காரை பறிமுதல் செய்து கொண்டு போய் விட்டனர்.
வங்கியின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ரேணு புனே மாவட்ட நுகர்வோர் ஆணையத்தை அணுகினார். இவரது மனுவை விசாரித்த புனே நுகர்வோர் ஆணையம் பாதிக்கப்பட்ட ரேணு பந்த்வால்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications