பாஸ்போர்ட்டை நிரந்தரமாக ஒப்படைக்கக் கோரி வைகோ மனு
சென்னை: பாஸ்போர்ட்டை நிரந்தரமாக தன்னிடம் ஒப்படைக்கக் கோரி மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட 9 பேர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை மறு ஆய்வு செய்த குழு, இந்த வழக்கை திரும்ப பெறும்படி தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது.
இதற்கிடையில் வைகோவை ஜாமீன் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் நிபந்தனையின்படி பாஸ்போர்ட்டை பொடா நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி பொடா நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை வைகோ ஒப்படைத்தார்.
இந் நிலையில் வெளிநாடு செல்வதற்காக தனது பாஸ்போர்ட்டை வழங்கக் கோரி சமீபத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்தார். அதன்படி பாஸ்போர்ட்டை வழங்கிய நீதிமன்றம் டிசம்பர் 7ம் தேதி மீண்டும் பொடா நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால் பாஸ்போர்ட்டை நிரந்தரமாக தன்வசம் வைத்திருக்க உத்தரவிடக் கோரி வைகோ சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செயப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் மற்றும் பெரிய கருப்பையா ஆகியோர், இந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு க்யூ பிரிவு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் 30ம் தேதி ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications