கலைவாணர் அரங்கத்தை இடித்து புது அரங்கம் கட்ட முடிவு

சென்னை சேப்பாக்கத்தில் எழிலுற நிற்கும் அரங்கம்தான் கலைவாணர் அரங்கம். திரையுலகில் பெரும் சேவையாற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நினைவாக இந்த அரங்கத்தை தமிழக அரசு கடந்த 1974ம் ஆண்டு கட்டியது. திமுக அரசில் கட்டப்பட்ட இந்த அரங்கத்தை அப்போதைய முதல்வராக இருந்த முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
அந்தக் காலத்தில் இருந்த வசதிகளுடன் கூடிய அரங்கமாதலால், இப்போது கலைவாணர் அரங்கம் பல்வேறு அசவுகரியங்கள் நிறைந்த அரங்கமாக மாறி விட்டது.
கடந்த 33 ஆண்டுகளாக பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட கலைவாணர் அரங்கத்தை இடித்து விட்டு உலகத் தரத்திலான வசதிகளுடன் கூடிய நவீன அரங்கமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த யோசனையை முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கட்டடக் கலை நிபுணரையும் கூட அரசு தேர்வு செய்து விட்டது. விரைவில் கட்டடத்தைப் பார்வையிட்டு அதை புதுப்பித்து எப்படிக் கட்டுவது என்பது குறித்த அறிக்கையை அந்த நிபுணர் அரசிடம் அளிக்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து புதிய கலைவாணர் அரங்கம் கட்டுவது தொடர்பான பணிகளை அரசு மேற்கொள்ளும்.












Click it and Unblock the Notifications