கரூர் கோர்ட்டில் பெண் போலீஸாரை அடித்த வக்கீல்கள்
கரூர்: கரூர் நீதிமன்ற வளாகத்தில் 2 பெண் போலீஸாரை, வக்கீல்கள் மூன்று பேர் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு கரூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஆவண அறைக்கு மாரப்பன், நடேசன், வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று வக்கீல்கள் வந்தனர்.
ஆனால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப் படையைச் சேர்ந்த பெண் காவலர்கள் நிர்மலாவும், சுமதியும், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இரவு நேரத்தில் உள்ளே அனுமதிக்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த மூன்று வக்கீல்களும், அந்த பெண் போலீஸாரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் இரு பெண் காவலர்களும் காயமடைந்தனர். இதையடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாங்கள் தாக்கப்பட்டது குறித்து 2 பெண் போலீஸாரும் புகார் செய்துள்ளனர்.
இந்த நிலையில் வக்கீல் மாரப்பன் தானாகவே ஒரு தனியார் மருத்துவமனையில் போய் உடல் நலம் சரியில்லை என்று கூறி அட்மிட் ஆகியுள்ளார்.
இந்த சம்பவத்தால் கரூர் காவல்துறையில் பரபரப்பு நிலவுகிறது.