திண்டிவனத்தில் சிறுமி மர்ம சாவு - மறியல், பதட்டம்

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 10 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட பதட்டமே அடங்காத நிலையில், அதே மாவட்டத்தின் திண்டிவனத்தில் 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சடலம் மழை நீர் குட்டையில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
திண்டிவனம், ரோசணைபாட்டை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவருக்கு பரக்கத்துன்னிசா (6) என்ற மகள் இருந்தார். பரக்கத்துன்னிசா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மகளை காணாத பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்தனர். மரக்காணம் சம்பவத்தால் சுதாரிப்போடு போலீஸாரும் சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் அதே பகுதியில் உள்ள ஒரு மழைநீர் குட்டையில் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் பர்கத்துன்னிசா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்து சிறுமியின் சடலத்தை பார்த்து கதறியழுதனர்.
காணாமல் போன சிறுமி பிணமாக கிடப்பதை அறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மக்கள் சாலை மறியல்:
இதற்கிடையில் சிறுமியின் உறவினர்களும், அப்பகுதியைச் சேர்ந்த மக்களும் திரண்டு சிறுமி கொலை செய்யப்பட்டு குட்டையில் வீசப்பட்டிருக்கிறாள். எனவே கொலையாளியை கைது செய்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி திடீரென்று திண்டிவனம்-பெங்களூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்தும் கலைந்து செல்லாததால், சாலை மறியல் செய்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications