2 காரணங்கள்-2 மிரட்டல் கடிதங்கள், 2 கைதுகள்
சென்னை: தனது செயற்கை மழை தொழில்நுட்பத்தை யாரும் கண்டுகொள்ளாததால் வெறுத்துப் போய் முதல்வருக்கு மிரட்டல் கடிதம் எழுதிய வாலிபரையும், அத்தை மகளின் காதலனை போலீசில் மாட்டிவிட ரஜினி-ஸ்னேகாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதிய நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. அதேபோல தலைமை செயலகம், அண்ணா அறிவாலயம் மற்றும் தி.நகரில் உள்ள ஒரு பிரபல ஜவுளி கடைக்கும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.
இதைத் தொடர்ந்து வந்த மற்றொரு கடித்தத்தில் ரஜினி, ஸ்னேகா ஆகியோருக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும், சில இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் ஒரு செல்போன் நம்பரும் இருந்தது.
இது குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் முதல் கடிதத்தை திருவண்ணாமலை மாவட்டம் ஆரஞ்சு கிராமத்தை சேர்ந்த ஞானவேல் (21) என்பவர் எழுதியது தெரியவந்தது.
இரண்டாவது கடிதத்தை புதுச்சேரி தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஜெயக்குமார் (27) என்பவர் தான் என்பது தெரியவந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஞானவேல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,
எனக்கு செயற்கை மழை பெய்ய வைக்கும் தொழில்நுட்பம் தெரியும். இதை பல முக்கிய பிரமுகர்களிடம் சொன்னேன். ஆனால் யாரும் நான் சொன்னதை ஏற்கவில்லை. எனது திறமையை வெளி உலகுக்கு காட்ட முடியாத ஆத்திரத்தில் மிரட்டல் கடிதம் எழுதினேன் என்று கூறியுள்ளார்.
இவராவது பரவாயில்லை. பிடிபட்ட இரண்டாவது வாலிபரான ஜெயக்குமார் போலீசாரிடம் கூறுகையில்,
எனது அத்தை மகள் சென்னையில் இருக்கிறார். அவளை நான் நாட்களாக காதலித்து வந்தேன். இந்த நிலையில் சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு வந்த அவள் வேறு ஒரு வாலிபருடன் செல்போனில் பேசினார்.
நானும் அந்த வாலிபரின் செல்போன் நம்பரை கண்டுபிடித்து அவருடன் பேசினேன். அப்போது அவருடைய பெயர் மதன் என்பதும் அவர் என் அத்தை மகளை காதலிப்பதும் தெரியவந்தது.
எனக்கு அத்தை மகள் கிடைக்காமல் போய்விட்டதால் அவளது காதலனின் செல்போன் நம்பருடன் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன். இதன்மூலம் அந்த காதலனை மாட்டி விடலாம் என்று திட்டமிட்டேன் என்று கூறியுள்ளார்.
கைதான ஞானவேல், ஜெயக்குமார் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனனர்.












Click it and Unblock the Notifications