ஊழலற்ற அரசு இருந்தால்தான் சுகாதார வசதி கிடைக்கும் - கலாம்
துர்காபூர் (மேற்கு வங்கம்): ஊழலற்ற அரசு உருவாக வேண்டும். அப்போதுதான் அனைத்து சமுதாய மக்களுக்கும் அடிப்படை சுகாதார வசதியை வழங்க முடியும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில், சர்வதேச மேம்படுத்தப்பட்ட தயாரிப்புத் தொழில்நுட்பம் குறித்த மாநாட்டை அவர் நேற்று தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது கலாம் கூறுகையில், ஊழலற்ற ஒரு அரசு உருவாக வேண்டும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் அந்த அரசால் அடிப்படை சுகாதார வசதிகளைச் செய்து தர முடியும்.
கிராமப்புறம், நகர்ப்புறம் என்ற வேறுபாடும், பாகுபாடும் சமுதாயத்தில் இருக்கவே கூடாது. அது நமது வளர்ச்சியைத் தடுக்கும்.
நாம் அடிப்படை அறிவியலுக்கும், அடிப்படைய ஆய்வுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஆனால் இன்று ஆய்வுகளை நடத்த நிதி ஒரு பெரும் தடையாக இருப்பதால், ஆய்வுகள் முடங்கிப் போயுள்ளன.
நம்மிடம் போதுமான யுரேனியம் இல்லை. எனவே தோரியம் குறித்து நாம் சிந்திக்கலாம். அதேசமயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நாம் மறந்து விடக் கூடாது என்றார் கலாம்.