டிச. 3 வரை ஜோதி மீது நடவடிக்கை இல்லை - அரசு வக்கீல்
சென்னை: சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்துள்ள வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜ்யசபா அதிமுக எம்.பியும், வழக்கறிருமான என்.ஜோதி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதுவரை அவர் கைது செய்யப்பட மாட்டார் என தமிழக அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமர்நாத் ராவ் என்பவர், ஜோதி மீது சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜோதி, பலமுறை டெல்லிக்கு பயணம் செய்தார். காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பாக அவர் டெல்லிக்குப் பயணம் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் காவிரி நடுவர் மன்றம் தொடர்பான எந்த வழக்கிலும் அரசு சார்பில் அவர் அதிகாரப்பூர்வமாக வக்கீலாக நியமிக்கப்படவில்லை. அப்படி இருந்தும் அவர் தமிழக அரசுப் பணத்தில் பலமுறை விமானத்தில் டெல்லிக்குச் சென்றுள்ளார். தமிழக அரசின் டெல்லி இல்லத்திலும் தங்கியுள்ளார்.
இந்த வகையில் அவர் பல லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறிய அமர்நாத் ராவ், சிபிசிஐடியிலும் புகார் கொடுத்தார்.
ஆனால் அந்தப் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென சிபிசிஐடி போலீஸார் அமர்நாத் ராவின் புகாரின் பேரில் ஜோதி மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று ஜோதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான உதவி அரசு வழக்கறிஞர் ராஜா இளங்கோ, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவைப்படுவதாக கோரினார். மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை ஜோதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.
அப்போது அமர்நாத் ராவ் ஆஜராகி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ஜோதிக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று கோரியிருந்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி சுதந்திரம், இந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.