மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசு திடீர் எச்சரிக்கை

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் காட்டமான பேச்சைத் தொடர்ந்து அரசு இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்டாய கிராமப்புற சேவையை எதிர்த்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில்தான் அதி தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் அகில இந்திய அளவில் போராட்டத்தைத் தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தை சில கட்சிகள் தூண்டி விட்டு வருவதாக சமீபத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், பொறியியல், சட்டக் கல்லூரிகள் உள்ளிட்ட பிற கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியபோதெல்லாம் உடனடியாக கல்லூரிளையும், விடுதிகளையும் மூட உத்தரவிட்ட தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விவகாரத்தில் மட்டும் மெளனம் சாதிப்பது ஏன் என்றும் அவர் கேட்டிருந்தார்.
இதுதொடர்பாக ராமதாஸுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கும் இடையே அறிக்கைப் போர்களும் நடந்தன.
இந்த நிலையில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் கல்லூரிகளும், விடுதிகளும் மூடப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாய கிராமப்புற சேவை என்ற மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தேவையற்றது.
இதுதொடர்பாக ஆராய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் விளக்கியுள்ள நிலையில் போராட்டத்தைத் தொடருவது தேவையற்றது.
மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தை அறிவித்ததைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி, இதுகுறஇத்து பிரதமருக்கும், அன்புமணிக்கும் கடிதம் எழுதுவதாக அறிவித்தார். மேலும் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முதல்வரின் கடிதத்திற்குப் பதில் அளித்து அமைச்சர் அன்புமணி அனுப்பிய கடிதத்தில், உயர் மட்டக் கமிட்டி அமைக்கப்பட்டிருப்பதாகவும், அதன் அறிக்கைக்காக அரசு காத்திருப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
எனவே மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு டிசம்பர் 3ம் தேதி முதல் வகுப்புகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அரசு கோருகிறது.
அன்றைக்குள் வகுப்புகளுக்கு மாணவர்கள் திரும்பாவிட்டால், கல்லூரிகளையும், விடுதிகளையும் தற்காலிமாக மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் நூதன போராட்டம்
இந்த நிலையில், நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் ரத்த தானம், மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்வது, மொட்டை போடுவது, மாணவிகள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது மற்றும் கருப்பு துணியால் வாய்களை கட்டிக் கொண்டும், நேற்று சென்னையில் போராட்டம் நடத்தினர்.
இன்றும் மாணவர்கள் குறு நாடகம் ஒன்றை போட்டு பொது மக்களுக்கு விளக்கி தங்கள் போராட்டத்தை நடத்தினார்கள்.
மதுரையில் ...
மதுரை மருத்துவ மாணவ-மாணவியர் 1,000 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக சென்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
கோவையில் ...
கோவையில், 10 மருத்துவ மாணவர்கள் மொட்டையடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டு 50 மாணவிகள் பேரூர் பட்டீசுவரர் கோவிலுக்கு சென்று ஆதி பிரதக்ஷன வழிபாடு நடத்தினர். அது முடிந்த பின்னர் கோவில்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் பூஜை செய்தனர்.
சேலத்தில் ...
சேலம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டர் மூலமாக பிரதமருக்கு கோரிக்கை மனுவையும் அனுப்பினர்.
நெல்லையில் தூக்கு போட்டு போராட்டம்:
நெல்லையில் மாணவ-மாணவிகள் தங்கள் உடம்பில் ரங்கோலி பொடிகளை பூசிக்கொண்டு கோமாளிகளை போலவும், மருத்துவ கல்வியை தூக்கில் போடுவது போல நடித்துக் காட்டியும் நூதன போராட்டம் செய்தனர்.
புதுச்சேரியிலும் ...
இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மாணவர்களிடம் கருத்து கேட்க டாக்டர் சாம்பசிவ ராவ் கமிட்டியினர் சென்றனர்.
ஆனால் அவர்களிடம் மருத்துவ மாணவர்கள் மட்டுமல்லாமல் மாணவ-மாணவியர்களின் பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications