பாலாறு: மத்திய அரசு பாரபட்சமாக நடக்கிறது - வைகோ

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை எதிர்த்து நேற்று வேலூரில் மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. வைகோ தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதம் முடிந்த பின்னர் வைகோ பேசினார். அப்போது அவர் கூறுகையில், டிசம்பர் 6ம் தேதி அணைக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக மத்திய அரசு பாரபட்சத்துடன் தமிழகத்திடம் நடந்து கொள்கிறது. ஆந்திர அரசின் முயற்சிகளைத் தடுக்க அது முயலவில்லை.
தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விஷயத்தில் உடனடியாக செயல்பட்டு, மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து அவற்றை தேசியமயமாக்க வேண்டும்.
எந்த மாநிலமும், பிற மாநிலத்தின் உரிமைகளைப் பறிக்கக் கூடாது. அனைத்து மாநிலங்களும், சட்டங்களையும், விதிகளையும் மதித்து நடக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
பாலாறு விவகாரம் மட்டுமல்லாது, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அனைத்து நதி நீர்ப் பிரச்சினைகளைலும் தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றி விட்டது, பாரபட்சப் போக்கையே அது கடைப்பிடித்துள்ளது என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications