அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா?
மதுரை: பொங்கல் பண்டிகையின்போது உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. சீறி வரும் காளைகளைப் பிடிக்க பாயும் வீர இளைஞர்களின் மயிர்க்கூச்செறியும் காட்சிகள் உலக அளவில் பாப்புலர் ஆனவை.
பொங்கல் பண்டிகையின்போது தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் களை கட்டியிருக்கும். மதுரை, தேனி, திண்டுக்கல், காரைக்குடி, ராமநாதபுரம், மேலூர் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் இந்த காலகட்டத்தில் விமரிசையாக நடக்கும்.
இவற்றில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண வெளிநாட்டினர் பெரும் திரளாக வருவார்கள்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளின்போது மாடுகள் முட்டி உயிரிப்போரும் கணிசமான அளவில் உள்ளனர். இதன் காரணமாக ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று கோரி ஜல்லிக்கட்டில் தனது மகனை இழந்த அலங்காநல்லூரைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. இருப்பினும் பொங்கல் பண்டிகையின்போது இந்த தடை தளர்த்தப்பட்டது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மிருக வதை தடை சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் இத்தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு மிருகவதை அல்ல, எனவே அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் உயர் நீதிமன்ற கிளை நிபந்தனையின் படி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது குறித்தும், கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மதுரை மாவட்ட கலெக்டர் தயாரித்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.