பாபர் மசூதி இடிப்பு தினம்: சபரிமலையில் தேங்காய் உடைக்க தடை
கொல்லம்: பாபர் மசூதி இடிப்பு தினம் நெருங்கி வருவதாலும், தீவிரவாத தாக்குதல் பீதி நிலவுவதாலும், சபரிமலையில் அய்யப்ப பக்தர்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேங்காய்களை வீசி எறிந்து உடைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
15வது ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினம் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந் நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவில் வளாகத்தில் தேங்காய்களை வீசி எறிந்து உடைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலுக்கு ஏற்கனவே தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கமாண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சாதாரண உடையிலும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. பக்தர்கள் அதிக அளவில் வந்து கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மின்சார வாரிய அலுவலகம், சரங்குத்தி, சபரி பீடம் ஆகிய 3 இடங்களில் மெட்டல் டிடெக்டர் வாயில் அமைக்கப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு கோபுரங்களில் பைனாகுலர் மூலம் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
10 டி.எஸ்.பி.க்கள், 27 இன்ஸ்பெக்டர்கள், 65 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 745 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தற்போது 60 கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதுதவிர பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
5-ந் தேதி இரவு நடை அடைக்கப்பட்டது முதல் 6-ந் தேதி அதிகாலை நடை திறக்கப்படுவது வரை 18-ம் படி ஏற யாருக்கும் அனுமதி கிடையாது.
சன்னிதானம் செல்லும் பக்தர்கள் பெரிய நடைப்பந்தல் தாண்டிய பிறகு கைப்பை, காமிரா, மொபைல்போன் ஆகியவற்றை கொண்டு செல்லக் கூடாது.
5-ந் தேதி நடை அடைக்கப்பட்டது முதல் 7-ந் தேதி அதிகாலை வரை வடக்கு நடை வழியாக பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஸ்ரீகோவில் முன்பு உள்ள உண்டியல் 6-ந் தேதி அகற்றப்படும். அதற்கு பதிலாக தெற்கு பகுதியில் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் நெய் தோணியில் தேங்காயை வீசி எறியவும் கூடாது, உடைக்கவும் கூடாது. 18-ம் படி மிதித்த பிறகு சோபானம் வரும் வரை பக்தர்கள் இருமுடியை அவிழ்க்க கூடாது.
போலீசாருக்கு சந்தேகம் இருந்தால் இருமுடிகளை அவிழ்த்து சோதனை செய்ய போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.