ஐ.சி.எல். 20-20 போட்டிகளுக்கு மவுசு இல்லை
மும்பை: பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் லீக்கின் 20-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே ஆதரவு கிடைக்கவில்லை. சொற்ப ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில்தான் இந்தப் போட்டிகள் நடந்து வருகின்றன.
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா படு தோல்வி அடைந்தவுடன், ஜீ டிவியின் சுபாஷ் சந்திரா, இந்திய கிரிக்கெட் லீக்கை அறிவித்தார். கபில் தேவ் இதன் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் கடுப்பான இந்திய கிரிக்கெட் வாரியம், ஐசிஎல்லை அங்கீகரிக்க மறுத்தது. இந்திய வீரர்கள் யாரும் இதில் சேரக் கூடாது என தடையும் விதித்தது. இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கீகரிக்க மறுத்ததால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் ஐசிஎல்லை அங்கீகரிக்க மறுத்து விட்டது.
இருப்பினும் பிரையன் லாரா, இன்சமாம் உல் ஹக் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் இதில் இணைந்தனர். இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனால் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விட்டது ஐசிஎல் நடத்தி வரும் 20-20 போட்டிகள். நவம்பர் 30ம் தேதி இந்தப் போட்டிகள் தொடங்கின. இதற்காக பெரிய அளவில் விளம்பரங்களும் கூட செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் எதிர்பார்ப்புக்கு மாறாக மகா டல் நிலையில் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஜீ டிவி குழுமத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட சானல்களின் ஒரு மணி நேர நிகழ்ச்சிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பை விட இந்தப் போட்டிகளுக்கு மகா மோசமான வரவேற்பு கிடைத்துள்ளதாக மும்பையைச் ேசர்ந்த டிவி ரேட்டிங் ஏஜென்சி ஒன்றின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சனிக்கிழமை மும்பை சாம்பியன்களுக்கும், ஹைதராபாத் ஹீரோக்களுக்கும் இடையே நடந்த போட்டியின் அரை மணி நேர ஆட்டத்தை மிகவும் சொற்பமானவர்களே பார்த்தனராம்.
ஜீ ஸ்போர்ட்ஸ் சானலில் ஒளிபரப்பான இந்த ஆட்டத்தை, அந்த சானலின் மொத்த வாடிக்கையாளர்களில் 1 சதவீதம் பேரே பார்த்ததாகவும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
சமீப காலத்தில் டிவிகளில் ஒளிபரப்பான ஒரு கிரிக்கெட் போட்டிக்குக் கிடைத்துள்ள மிக மோசமான வரவேற்பு இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை ஜீ குழுமம் மறுக்கிறது. அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 125 நாடுகளில் ஐசிஎல் போட்டிகளை மக்கள் பார்த்துள்ளனர். ஆரம்ப கட்டத்தில் சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும். ஆனால் அது விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்கிறார் அவர்.