திருச்செந்தூரில் புதிய சுற்றுலா மையம்
திருச்செந்தூர்:திருச்செந்தூரை தலைமையிடமாக கொண்டு சுற்றுலா மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் எல்.கே.திரிபாதி கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய திரிபாதி, தனது மனைவி பத்மஜாவுடன் வந்தார். அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனியாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
சாமி தரிசனத்தை முடித்து விட்டு வெளியே வந்த திரிபாதி செய்தியாளர்களிடம் பேசுகையில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் அடிப்படை வசதிகள் குறித்த பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்.
அறநிலையத்துறை உயர்மட்ட குழு முதல் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் பராமரிப்பு பணி குறித்து விவாதிக்கப்பட்டது. அதனபடி தமிழக கோயில்களில் முழமையான பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
திருச்செந்தூரை தலைமையிடமாக கொண்டு சுற்றுலா மையம் அமைக்கப்படும். தமிழக கோயில்கள் அனைத்தும் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை இல்லை. போதுமான அளவு இருப்பு உள்ளது. இதனால் சம்பா பயிர் சாகுபடி குறித்த காலத்தில் நடந்து வருகிறது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 618 ஊராட்சிகள் மற்றும் 561 பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அனைத்தும் 5 ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அறிவொளி இயக்க பணியாளர்கள் கிராமபுற நூலகர்களாக நியமிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications