ஏர்வாடியில் இன்று சந்தனக்கூடு விழா
ஏர்வாடி: தமிழகத்தின் பிரபல ஏர்வாடி தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் அமைந்துள்ள தர்கா மிகவும் புகழ் பெற்றது.
ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீது ஒலியுல்லாவின் 833ம் வருட உரூஸ் எனும் சந்தனக்கூடு விழா இன்று நள்ளிரவு நடக்கிறது.
நாளை (4ம் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு புனித சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி இடம் பெறுகிறது. தன்விழா 11ம் தேதி குர் ஆர்ன் ஷரீப் ஓதி மாலை 5 மணிக்கு கொடியிறக்கப்பட, இரவு 7 மணிக்கு தப்ரூக் (பிரசாதம்) வழங்குதலுடன் நிறைவு பெறுகிறது.
சந்தனக் கூடு விழாவை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தடையில்லா மின் வினியோகம் கிடைக்க கீழக்கரை மின் பகிர்மான நிலையத்தில் மதுரை இன்ஜினியர்கள் பணியாற்றுவர் என ராமநாதபுரம் செயற் பொறியாளர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
அனைத்து வசதிகளையும் தர்கா நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து செய்துள்ளன. இந்த சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு ஏர்வாடி விழாக்கோலம் கொண்டுள்ளது.
பல பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.