டாக்டர்கள் ஸ்டிரைக்கால் 9 குழந்தைகள் பரிதாப சாவு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் டாக்டர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால், 9 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள நிலோபர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு ஒரு குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அப்போது குழந்தைக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க தாமதமானதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கார்வான் தொகுதி எம்.எல்.ஏ அப்சர் கானுக்குத் தகவல் போனது. அவர் தனது ஆதரவாளர்களுடன் மருத்துவமனைக்கு வந்தார். அங்கிருந்த டாக்டர்களை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து டாக்டர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் மருத்துவமனை ஸ்தம்பித்தது.
இந்த திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் இன்று காலை வரை 6 குழந்தைகள் சிகிச்சை அளிக்க வழியில்லாமல் பரிதாபமாக இறந்துள்ளனர். தொடர்ந்து பல குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏவைக் கைது செய்யும் வரை போராட்டத்தை விட மாட்டோம் என்று கூறி டாக்டர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக ஹைதராபாத் காந்தி மருத்துவமனை டாக்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். வாரங்கல் உள்ளிட்ட பல இடங்களிலும் டாக்டர்களுக்கு ஆதரவாக அங்குள்ள டாக்டர்கள் தர்ணா நடத்தினர்.
டாக்டர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் மாநில சுகாதார அமைச்சர் அருணா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. தொடர்ந்து நிலைமை பதட்டமாக இருப்பதால் அரசு மருத்துவமனைகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.